வள்ளுவர் கோட்டம் 'காதல்' கோட்டமாகிறது

தினமலர், சென்னை, ஜூன் 02

வள்ளுவர் கோட்டம் 'காதல்' கோட்டமாகிறது. சோம்பேறிகளின் புகலிடமாகவும் சீரழிகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் உரிய பராமரிப்பு இல்லாமல் பாழாகிக் கொண்டிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது, தகுந்த பராமரிப்பு இல்லாததால் வள்ளுவர் கோட்டம் ஆங்காங்கே இடியும் நிலையில் உள்ளது. குறள் கல்வெட்டுகள் எல்லாம் எச்சில் துப்பும் இடமாக கவனிப்பின்றி இருக்கிறது. வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றி திருக்குறள் மட்டுமல்லாமல், அதற்கு போட்டியாக ஆங்காங்கே காதலர்களின் நவீன கல்வெட்டுக்களும் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. வள்ளுவருக்கு எழுப்பப்பட்ட தேர் காதலர்களின் புகலிடமாகவும், சோம்பேறிகளின் உறைவிடமாகவும் மாறி உள்ளது. தேரின் உச்சியில் தேனீக்களும் ஆங்காங்கே கூடு கட்டி பொதுமக்களை அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது. வள்ளுவர் கோட்டத்தின் மேல் தளத்தின் ஒரு பகுதி பாதியாக இடிந்து, உயிரிழப்பை ஏற்படுத்த காத்திருக்கிறது. திருக்குறளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஆங்காங்கே அழகிய ஓவியங்களுடன் கூடிய குறள் விளக்கங்களும் வரிசையாக வைக்கப் பட்டுள்ளன.அத்தகைய ஓவியங்கள் பராமரிப்பு இல்லாததால் பூச்சிகளால் அரித்தும், மழை நீரில் நனைந்தும் அழிந்து வருகின்றன.

நெஞ்சு பொறுக்குதில்லையே...

தினமணி, சென்னை, ஜூன் 5

கர்நாடக மாநிலத்தில் கழிப்பறை ஒன்றில், ஆண்களின் அடையாளச் சின்னமாக மகாகவி பாரதியின் படம் வரையப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.உடனடியாக படத்தை கழிப்பறையில் இருந்து அழித்துவிட்டு, இச் செயலைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

கவிஞர் வைரமுத்து:

செய்தி கண்டு அதிர்ந்து போனேன். மாறிமாறி வந்தன வெட்கமும் துக்கமும். அறிந்து செய்திருந்தாலும் அறியாமல் செய்திருந்தாலும் இது மன்னிக்க முடியாத பிழை.கழிப்பறைச் சுவரில் மகாகவியின் உருவத்தைப் பொறித்திருப்பது சமூகப் பிழையோடு கூடிய சரித்திரப் பிழை. வேறெங்கு நிகழ்ந்திருந்தாலும் அறியாதார் செய்த தவறென்று கொள்ளலாம். கர்நாடக மாநிலத்தில் இது நிகழ்ந்திருப்பது உள்நோக்கம் உள்ளதோ என்று கவலைகொள்ள வைக்கிறது.இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா? அந்த மீசைச் சூரியனை - தமிழின் தேசிய அடையாளத்தை இவ்வளவு இழிவு செய்வதா? உடனே அழிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் தன்னிலை விளக்கம் தர வேண்டும். கர்நாடக அரசு தலையிட வேண்டும். இல்லாவிட்டால் கவிஞர்கள் திரண்டு தலையிட வேண்டியிருக்கும். இதை இதயக் குமுறல் என்று கொண்டாலும் சரி; எச்சரிக்கை என்று கொண்டாலும் சரி.

பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன்:

இது தமிழ் மக்களின் உணர்வை அவமதிப்பதும் தமிழ்ப் பெரும் கவிஞனை அவமதிப்பதும் ஆகும்.இந்த அவமதிப்பை உடனே நீக்க கர்நாடக அரசு உத்தரவிட வேண்டும். மேலும் இக் கண்டனத்துக்குரிய செயல் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டார்கள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

கொடுமையிலும் கொடுமை இது. "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதனை நினைந்துவிட்டால்' என்றுதான் ஆத்திரமும் கவலையும் எழுகிறது.திருவள்ளுவர் சிலையைக் கோணிப் பையில் மூடி வைத்தனர். காவிரியில் தமிழகத்தின் உரிமையைப் பறித்தனர். இந்த தொடர் கொடிய சங்கிலி நிகழ்வுகளில் இன்றைக்குப் பாரதியார் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். கவிஞன் குவெம்புக்கு இதுமாதிரி நேர்ந்தால் கர்நாடகத்தினர் பார்த்துக்கொண்டு இருப்பார்களா? பாரதியைச் சிறுமைப்படுத்தும் இந்த அநாகரிக செயல், திட்டமிட்டு கேளிக்கையாகச் செய்யப்பட்டு உள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

காங். தலைவர் குமரி அனந்தன்:

அவமானத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஆண்மையின் சின்னம் பாரதி. அவன் வீரத் திருவுருவமாக காட்சியளிக்கும் படம் கர்நாடக சட்டப் பேரவையில் வைப்பதற்கு தகுதி படைத்தது. அந்த படத்தைக் கழிப்பறையில் இருந்து எடுப்பதோடு நடந்துவிட்ட செயலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

பாரதிக்கு அவமானம்